
மீன் குழம்பு என்றாலே பலருக்கும் நாவில் எச்சில் ஊறும். அதுவும் மண் சட்டியில் வைத்து மறுநாள் சாப்பிடும் மீன் குழம்பின் சுவைக்கு ஈடே கிடையாது. வஞ்சரம், சீலா அல்லது சங்கரா என உங்களுக்குப் பிடித்த மீனைப் பயன்படுத்தி, அசத்தலான சுவையில் கிராமத்து மீன் குழம்பு எப்படிச் செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
- மீன் – ½ கிலோ (வஞ்சரம் / சேலா / சங்கரா)
- வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
- தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
- இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
- மிளகாய்த்தூள் – 2 மேசைக்கரண்டி
- தனியாத்தூள் (மல்லித்தூள்) – 1 மேசைக்கரண்டி
- மஞ்சள்தூள் – ½ மேசைக்கரண்டி
- சீரகம் – ½ தேக்கரண்டி
- கசகசா விழுது – 1 மேசைக்கரண்டி (விருப்பப்பட்டால் மட்டும்)
- புளி – 1 எலுமிச்சை அளவு (கரைத்து வைத்துக் கொள்ளவும்)
- கருவேப்பிலை – சிறிது
- கொத்தமல்லி – சிறிது
- உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
- தாளிப்பு மற்றும் வதக்கல்: ஒரு கடாயில் (முடிந்தால் மண் சட்டி) தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் மற்றும் கருவேப்பிலை தாளிக்கவும். பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- மசாலா சேர்த்தல்: வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும். அதன்பின் தக்காளியைச் சேர்த்து சுருள வதக்கவும்.
- குழம்பு கொதிக்க வைத்தல்: தக்காளி நன்கு வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு கரைத்து வைத்துள்ள புளி நீர் மற்றும் (விருப்பப்பட்டால்) கசகசா விழுது சேர்த்து குழம்பை நன்கு கொதிக்க விடவும்.
- மீன் வேகவைத்தல்: குழம்பின் பச்சை வாசம் நீங்கி, எண்ணெய் பிரிந்து வரும் போது, சுத்தம் செய்து வைத்துள்ள மீன் துண்டுகளை மெதுவாக குழம்பில் சேர்க்கவும்.
- பரிமாறுதல்: மீன் துண்டுகளைச் சேர்த்த பிறகு அடுப்பை மிதமான தீயில் (Medium flame) வைத்து, மூடி போட்டு 10 நிமிடம் வேக விடவும். மீன் உடைந்து விடாமல் கவனமாகப் பார்த்து, இறுதியில் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால், கமகமக்கும் மீன் குழம்பு தயார்!
சுவைக்கான டிப்: மீன் குழம்பை சூடாக சாப்பிடுவதை விட, செய்து 2 முதல் 3 மணி நேரம் கழித்து சாப்பிட்டால் மசாலாக்கள் மீனில் இறங்கி சுவை இன்னும் அற்புதாமாக இருக்கும்!

