மாசு, மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள், சத்து குறைபாடு போன்ற காரணங்களால் பல பெண்களுக்கு முடி உதிர்வு ஏற்படுகிறது. இந்தப் பிரச்சினைக்கு எளிய தீர்வாக அமைகிறது கருஞ்சீரகம்.
கருஞ்சீரகம் யுனானி, ஆயுர்வேதம், சித்தமருத்துவம் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது. கருஞ்சீரக விதையினுள் இருக்கும் தைமோகுயினன் என்னும் வேதிப்பொருளானது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இந்த கருஞ்சீரக விதையிலிருந்து தயாரிக்கப்படும் கருஞ்சீரக எண்ணெய் உடல் எடை குறைப்பில் உதவுகிறது.
இதேபோன்று, கூந்தலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு கருஞ்சீரக எண்ணெய் சிறந்த தீர்வாக உள்ளது. இந்த எண்ணெய், முடி உதிர்வை போக்கி வளர்ச்சியை அதிகரிக்கிறது. முடி வறட்சி, வெட்டு, அரிப்பு பொடுகு போன்ற பிரச்சினைகளை தடுக்கிறது. இந்த எண்ணெயை ஆண், பெண் இருவரும் பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள் :
- கருஞ்சீரகம் – 100 கிராம்,
- வெந்தயம் – 100 கிராம்,
- தேங்காய் எண்ணெய் – 150 மில்லி.
செய்முறை :
கருஞ்சீரகத்தையும், வெந்தயத்தையும் மிக்சியில் பொடியாக்கி சிறிய பாத்திரத்தில் கொட்டி, அதனுடன் தேங்காய் எண்ணெய் ஊற்றி கலக்க வேண்டும்.
இதை அடுப்பில் வைத்து நேரடியாக காய்ச்சாமல் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். அந்த நீரில் தேங்காய் எண்ணெய்க் கலவை அடங்கிய சிறிய பாத்திரத்தை வைத்து, சூடுபடுத்த வேண்டும். இந்த முறையில், எண்ணெய் தயாரிப்பதற்கு கூடுதல் நேரம் தேவைப்படும்.
பின்பு காய்ச்சிய எண்ணெய்யை ஆறவைத்து, கண்ணாடி பாட்டிலில் ஊற்றி 3 முதல் 4 நாட்கள் வரை வெயிலில் வைத்து எடுத்தபிறகு பயன்படுத்தலாம்.
வாரத்தில் 2 அல்லது 3 முறை தலையில் நன்றாக தேய்த்து, அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு தலைக்கு குளிக்கலாம்.